இலங்கை திரும்ப அனுமதியாம்!



முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.

முருகன் என்றழைக்கப்படும் சிறீஹரன், தனது மகள் வசிக்கும் பிரித்தானியா செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க புகைப்பட அடையாள அட்டையை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஸ் குமார், குமரேஸ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட மூவருக்கும்இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டை வழங்கியுள்ளது என அரசாங்க சட்டத்தரணி  மன்றில் தெரிவித்துள்ளார்.

அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த அனுமதி வழங்குமாறு மாநில அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மனுதாரருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதை கருத்திற்கு கொண்டு பிரித்தானியா செல்ல அவருக்கு அடையாள அட்டை தேவையில்லை என்று கூறி மனுவை நீதிமன்றம தள்ளுபடி செய்தது.

முருகனின் மகள் ஹரித்ரா பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என்றும், முருகன் பிரித்தானியாவில் வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments