வெடுக்குநாறியில் கைதானவர்கள் கொழும்பில் முறைப்பாடு


வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

 வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியின் செயற்பாடுகள்  தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும்   சிறீலங்கா பொலிசாருக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பில்  முறைப்பாடு செய்யப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள ஐ நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்கள் மற்றும் கைதுகள் துன்புறுத்தல்கள் அடிப்படை வசதிகளற்ற சிறையில் அடைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது. 

மேலும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரது பக்கச் சார்பானதும் நம்பகமற்றதுமான செயற்பாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இடையூறுகள் இன்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கோரி மகஜர் ஒன்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கையளிக்கப்பட்டது.

No comments