மீனவ அமைப்புக்கள் போர்கொடி!
அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவ அமைப்புக்களை தனது கைகளுள் முடக்கிவிட முற்பட்டுள்ள போதும் உரிமைகளிற்காக மீனவ அமைப்புக்கள் மீண்டும் கூட்டாக செயற்பட முன்வந்துள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஐந்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு பேரணியில் இன்று ஈடுபட்டனர்.
இன்று (09) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றிருந்தது.
பின்னர், ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசினால் புதிதாக உருவாக்கப்பட்ட கடற்றொழிலாளர் சட்ட வரைபை நிராகரித்தல், வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல்.
வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் கடற்றொழிலை மேற்றெகாள்ள அனுமதி வழங்கக்கூடாது.
வெளிநாட்டு படகுகளால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஸ்ட ஈடு வழங்கக்கோரல்.
கடற்றொழிலாளர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் என்பனவற்றினை முன்னிறுத்தியே போராட்டம் முன்னெடுக்கபபட்டிருந்தது.
கவனயீர்ப்பு பேரணியின் போது ஊர்காவற்றுறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர் அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர் ஜே.ஜோகராஜ் மற்றும் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.
Post a Comment