கொச்சியிலிருந்து கப்பல் புறப்பட்டது!



இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கேதுவாக கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கப்பல் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் நாளை காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்குமிடையிலான நாளாந்த விமானசேவை 200வது பறப்பினை பூரணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments