குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம்


மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டமொன்றை கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்.

”மேல்மாகாணத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களில் வசிக்கின்றவர்களை புனர்வாழ்வளித்து வசதிகளுடன் கூடிய நகர்ப்புற உத்தேச வீட்டுத்திட்ட முறையில் வீடுகளில் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கமைய நடைமுறைப்படுத்தப்படும் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்திற்கான உதவித்தொகையாக 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குவதற்கு சீனக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தக் கருத்திட்டத்தின் கீழ் காணி அபிவிருத்தி செய்தல் மற்றும் வேலைத்தளத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.

அதற்கமைய, சீனக் குடியரசுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments