நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 13 கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர்களால் 13 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

அதன் போது கடற்தொழிலாளர்களின் 03 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்டுள்ள கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய போது 13 கடற்தொழிலாளர்களையும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார். 

No comments