இலங்கை கடற்தொழிலாளர்கள் தமிழகத்தில் கைது


இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் செய்த குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை  இந்திய கடலோர காவல் படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர். 

அத்துடன் கடற்தொழிலாளர்கள் பயணித்த நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

கைதானவர்கள், படகுகளுடன்  மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம்  கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

அதேவேளை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில்  மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவற்றை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மண்டபம் பகுதியை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்

அந்நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்தொழிலாளர்கள் இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து  மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு,  அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டை வாங்கி செல்ல நடுக்கடலில் காத்திருந்தார்களா ? என்ற கோணத்தில் இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், தாம் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வந்ததாக கைதாகியுள்ள 08 கடற்தொழிலாளர்களும் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும்  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments