மீனையும் விட்டு வைக்காத ஆமி!



வவுனியா  கனகராயன் குள பகுதியில் உள்ள கரப்புகுத்தி குளத்தில் அத்துமீறி மீன்பிடிக்க முயன்ற இராணுவத்தினருக்கும் உள்ளுர் தமிழ் மக்களிற்குமிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு கரப்புக்குத்தி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப்போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்திருந்தனர். எனினும் குளத்தில் “மீன்பிடிக்க வேண்டாம்” என உள்ளுர் மக்கள் இராணுவத்திற்குத் தெரியப்படுத்தியபோதும்   இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்தை உள்ளுர் மக்கள் மறித்த போது இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்த  வாள்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (வயது 29) என்ற இளைஞன் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

அதேவேளை, இராணுவத்தைச்  சேர்ந்த ஒருவரும் மாங்குள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னராகவும் தொடர்ந்தும் வடகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படையினரது பிரசன்னமே பொதுமக்களுடனான மோதல்களாக வலுத்துவருகின்றது.





No comments