காங்கேசன்துறையில் இரும்பு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது , 

வலி.வடக்கில் காணி இல்லாமல் முகாம்களில் வாழ்த்து வரும் மக்களுக்கு வலி.வடக்கில் இனம் காணப்பட்டுள்ள அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கடந்த வாரம் காணி இல்லாத 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்து கையளிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை காங்கேசந்துறை பகுதிகளில் உயர் பாதுகாப்பபு வலயங்களில் இருந்து இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறி வருகின்றனர். நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள காணிகளும் மிக விரைவில் விடுவிக்கப்பட்டு , காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.  என தெரிவித்தார். 

அதன் போது , காங்கேசன்துறை பகுதிகளில் இராணுவத்தினர் வெளியேறியுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் அக்காணிகளுக்குள் புகுந்து இரும்பு திருட்டில் ஈடுபடுவதற்காக வீடுகளை உடைத்து நாசமாக்கி வருகின்றனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் பல தரப்பிலும் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது. என்பது தொடர்பில் ஈ.பி.டி,பி, ஊடக பேச்சாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது , 

இது தொடர்பில் நாமும் அறிந்து கொண்டோம். அவ்வாறான இரும்பு திருடர்களை கைது செய்வதற்கும் , இரும்பு திருட்டுக்களை தடுக்கவும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் நடவடிக்கை எடுக்க கோரவுள்ளோம். விரைவில் அந்த காணிகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரவுள்ளோம் என தெரிவித்தார். 

No comments