" நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்" என மிரட்டிய இளைஞன்


" நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்" என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டில் , தனது உறவினர் ஒருவரிடம் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் 2 இலட்ச ரூபாய் பணத்தினை கடனாக பெற்ற பின்னர் , அதனை மீள கையளிக்காது காலம் கடத்தி வந்தார். 

அதனால் உறவினரின் பணத்தினை மீள பெற்றுக்கொடுக்க உறவினர்களை அழைத்து சென்று பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தேன். 

எமது முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பணத்தினை பெற்றவரை விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர். 

அந்நிலையில் பணம் பெற்ற நபர் என்னை தொலைபேசி ஊடாக அழைத்து , " நான் சரத் வீரசேகராவில் ஆள், உன்னை தூக்குவேன் " என மிரட்டினார் என இளைஞன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments