தமிழக கடற்தொழிலாளர்கள் 15 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 தமிழக கடற்றொழிலாளருக்கும், 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி தமிழக கடற்தொழிலாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.   

கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினமே நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, 15 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதன் போது 15 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து ஊர்காவற்துறை நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No comments