போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றத்தில் யாழில் இருவர் கைது


வெளிநாட்டிற்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதி பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

போலி அனுமதி பத்திரம் வைத்திருந்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து , அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தில் , சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாகவே போலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கியவர்களின் தொடர்பு ஏற்பட்டது எனவும் , சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் அறவிட்டார்கள் எனவும் , தனது வீட்டிற்கு வாகனம் ஒன்றில் வந்து கைரேகைகளையும் , பிற ஆவணங்களையும் பெற்று சென்றனர் எனவும் தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த நபர்களின் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரிப்பதற்காக வைத்திருந்த உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் , குறித்த நபர்களிடம் போலியான சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவித்துள்னர். 

No comments