மோடிக்கு கடிதம்!




யாழில் மீனவ அமைப்புக்கள் பிளவுண்டுள்ள நிலையில் வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்தியப் பிரதமர் மோடி ஆவனை  செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்துள்ளன.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து  செவ்வாய்க்கிழமை (13) காலை கலந்துரையாடினர்.

அதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக  கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.

கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன எனவும் மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கியிருந்தனர்.


No comments