கதிரையும் போனது:வழக்கும் போனது!



 பண்ணையில் நிறுவப்பட்ட சிலை தொடர்பில் காவல்துறைக்கு தொலைபேசி வழி முறையிட்டதாக தெரிவித்த வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரான சிங்களவர் ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தொடர்புடைய வழக்கும் ரத்தாகியுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி, இலங்கை காவல்துறை தாக்கல் செய்த வழக்கை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கை தொடர இலங்கை காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என, நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கு தொடர்பில், காவல்துறையின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்தி, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி, கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது, நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.


No comments