கம்பளையில் பொலிஸார் துப்பாக்கி சூடு - நாய் உயிரிழப்பு ; இளைஞன் காயம்


சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் என வீடொன்றில் புகுந்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வீட்டில் நின்ற 19 வயது இளைஞன் காயமடைந்துள்ளதுடன் , வீட்டாரால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது. 

கம்பளை பன்விலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வீட்டில் சோதனையிட முயன்றுள்ளனர். 

அதன் போது ஏற்பட்ட தர்க்கத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு , வீட்டில் இருந்த 19 வயது இளைஞன் இலக்காகி காலில் காயமடைந்துள்ளார். 

அதேவேளை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது. 

காயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல அனுமதிக்காது பொலிஸார் இளைஞனை வீட்டினுள் வைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் , 45 நிமிடங்களுக்கு மேலாக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பொலிஸாருடன் வாக்கு வாதப்பட்டு , இளைஞனை வீட்டில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments