மன்னாரில் சிறுமிகள் கடத்தல் முயற்சி ; சந்தேகநபர்களை நீதிமன்றில் அடையாளம் காட்டிய சிறுமிகள்


தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் அடையாளம் காட்டியுள்ளனர்.

தலை மன்னார் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண்டும் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் அழைக்கப்பட்டு சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம் பெற்றது.

இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

அதனை அடுத்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

No comments