வவுனியாவில் முன்னாள் காதலியை சுட்டு கொன்ற இளைஞன் ; தன்னை தானே சுட்டு தற்கொலை!


வவுனியாவில் பெண்ணொருவரும் ஆணொருவரும் இடியன் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பழைய காதலியான பெண்ணை சுட்டு கொன்று விட்டு , இளைஞன் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

பூவசரன்குளம் பகுதியை சேர்ந்த நியூட்டன் தர்சினி (வயது 26) எனும் பெண்ணே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

நீலியாமோட்டையை சேர்ந்த சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) எனும் இளைஞனே தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்த இருவரும் காதலித்து வந்த நிலையில் உயிரிழந்த பெண் காதல் உறவை முறித்துக்கொண்டு பிறிதொரு நபரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உண்டு. 

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை தனது பழைய காதலி , கணவன் குழந்தையுடன் வாழ்ந்து வரும் வீட்டிற்கு இடியன் துப்பாக்கியுடன் சென்ற இளைஞன் , அப்பெண்ணின் மீது சூடு நடாத்தியுள்ளார். அதில் அப்பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

அங்கிருந்து தப்பி சென்ற இளைஞன் அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள கோயில் ஒன்றின் முன்பாக தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பூவசரன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments