வடக்கில் இரு படையினர் பலி!

 


வடபுலத்தில் இரு வெவ்வேறான சம்பவங்களில் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த  கடற்படை சிப்பாய் ஒருவர் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி  வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் பணியாற்றும் 23 வயது பெண் சிப்பாய் டெங்கு நோய் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி காய்ச்சல் காரணமாக பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனால், அவர் கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த கே.எம்.கே.செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.


No comments