நெடுந்தீவில் ஐவர் படுகொலை ; படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி உயிரிழப்பு


யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்கள் படுகொலையான சம்பவத்தில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

நெடுந்தீவை சேர்ந்த க.பூரணம் (வயது 100) எனும் மூதாட்டியே இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். 

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்த 06 முதியவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து முதியவர்கள் உயிரிழந்த நிலையில் , 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இதேவேளை குறித்த சம்பவத்தில் வீட்டின் வளர்ப்பு நாய் மீதும் கொலையாளி தாக்குதல் நடாத்தி இருந்ததில் , காயங்களுக்கு உள்ளான நாயும் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 51 வயதான புங்குடுதீவு வாசி ஒருவர் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில் , குறித்த சந்தேக நபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொலையானவர்களின் 25 பவுண் நகைகள் , உடைமைகள் மற்றும் கொலை செய்யப்பயன்படுத்திய கத்தி , கொலை செய்யும் போது அணிந்திருந்த சாரம் ஆகியவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments