பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மாற்றப்படும் – நீதி அமைச்சர்


மிகவும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தங்களையோ அல்லது மற்றும் மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

எனவே சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சமோ அதிருப்தியோ கொண்டிருக்க தேவையில்லை என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் குறித்து உலக மற்றும் உள்ளூர் சமூகம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை 1979 ஆம் ஆண்டுக்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.

ஆகவேதான் கடுமையான சட்டமாக முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டதிற்கு மாற்றீடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

பயங்கரவாத முயற்சிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் அடிப்படை, மனித மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைளின்படி வரைவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

வாக்குமூலங்களை ஆதாரமாக ஏற்று சந்தேக நபருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்வது போன்ற பெரும்பாலான விதிகள் புதிய சட்டமூலத்தில் நீக்கப்பட்டுள்ளன என நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments