உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது


எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...

உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும்.

இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்நாளில், நம்பிக்கை மற்றும் விடுதலை மூலம் இருள் மற்றும் விரக்தியை நீக்கும் செய்தியை உள்வாங்கிக் கொள்ள அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

பெரும் துயர், நிச்சயமற்ற தன்மை, ஏமாற்றம் ஆகியவற்றுடனான கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு நல்ல நாளை எதிர்பார்த்து அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம். எனது தலைமையிலான அரசாங்கம் இன, மத, கட்சி அல்லது நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கை மக்கள் அனைவரினதும் அபிலாஷைகளை நனவாக்க, அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் இந்தச் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன். குறுகிய அரசியல் இலக்குகளிலிருந்தும், பின்தங்கிய போக்குகளிலிருந்தும் விலகி நாட்டைக் கட்டியெழுப்பும் பொது வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்ப்பதே இன்றைய தேவையாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அந்தப் பணிகளை எந்தவொரு தலையீடும் இன்றி சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான பின்னணியை அமைத்துள்ளோம் என்பதையும் நான் நினைவுகூருகின்றேன்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்க உறுதியான மனநிலையையும், ஆன்மீக பலத்தையும் பிரதிபலிக்கும் ஒரு ஆசீர்வாதமாக உயிர்த்த ஞாயிறு அமைய வேண்டும என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். மேலும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அர்த்தமுள்ள மற்றும் அமைதியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments