கோட்டா மூளைக்குள் ஒன்றுமில்லையாம்!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூளையில்லாதவர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி நரி போன்றவர். ஆகவே கோட்டாபயவை போன்று ரணிலை இலகுவில் விரட்டியடிக்க முடியாதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.

ரணில் விக்ரமசிங்க ஒரு நரி போன்றவர், எப்படியாவது தந்திரோபாயங்களை மேற்கொண்டு உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார் .தென்பகுதி மக்களைப் போன்று வடகிழக்கு மக்களும் தேர்தலை நடத்துமாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக மறைமுக சதி இடம்பெறுகின்றது. மொட்டு கட்சியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடவில்லையென பசில் ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் அவர் பல்வேறு சுயட்சைக் குழுக்களை வடக்கு கிழக்கில் இறக்கியுள்ளார்.

அதற்காக வியாழேந்திரன், பிள்ளையான் போன்றோரின் கட்சிகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கிழக்கில் படகிலும் வடக்கில் வீணையிலும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் முன்னர் ஒரு முறை கூறியிருந்தமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

கோட்டாபயவை பதவியிலிருந்து நீக்குவதற்காக தென்பகுதியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நாமும் களத்தில் நின்றோம். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments