பாலைதீவிற்கும் புத்தர் வந்தார்!



யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கர்களது வழிபாட்டிற்குரிய பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் விழா12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில் அங்கு முளைத்துள்ள புத்தர் சிலைகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழ்.ஆயர் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட இருப்பதுடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருநாள் விழாவில் கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் குடியமராத பாலை தீவு இலங்கை கடற்படை வசமுள்ள நிலையிலேயே அங்கு புதிதாக புத்தர் சிலைகள் அந்தோனியார் ஆலய சூழலில் நிறுவப்பட்டுள்ளது.

இதனிடையே பாலைதீவு மற்றும் கற்கடதீவு கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற உள்ளுர் மீனவர்களிற்கு கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்படையினர் மறுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

ஆனால் தென்பகுதி மீனவர்கள் பாலைதீவு மற்றும் கற்கட தீவு கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக உள்ளுர் மீனவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

வருடாந்த ஆலய உற்சவத்தில் பங்கெடுக்க குடும்பம் குடும்பமாக வருகை தரும் யாத்திரீகர்கள் தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.


No comments