அமைச்சருக்கு கச்சதீவில் பொன்னாடை!

 


யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, அரச அமைச்சர் டக்ளஸிற்கு பொன்னாடையுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை -இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் பேச மீனவ தலைவர்களும் கச்சதீவில் ஒன்று கூட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான  தலைவரான முனுசாமி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்காக வருகை தந்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில்  இடம்பெற்ற நல்லெண்ணச் சந்திப்பின் போதே குறித்த நிகழ்வு இடம்பெற்றது

இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக, வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறி காட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுகள் மூலம் கச்சதீவு நோக்கி பயணமாகியுள்ளனர்.

யாழ்.ஆயர் தலைமையில் திருப்பலி பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக இந்தியாவிலிருந்து இரண்டாயிரத்து 408 பேர் வருகை தரவுள்ளதாகவும், இதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 60 விசைப்படகுகளும் 12 நாட்டுப் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிற்கு கச்சதீவு செல்ல தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.


No comments