கோட்டா கொலைகள்:மிரட்டியதாதல் பொய் சாட்சி



கோட்டாபய ராஜபக்சவின் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குமூலம் பொய்யானது என நீதிமன்றில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இரகசிய தடுப்பு முகாம்களில் கொல்லபட்டு முதலைகளிற்கு அவர்களது உடல்கள் வீசப்பட்டதாக ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கோட்டபாய ஜனாதிபதி தேர்தலில் வென்றதையடுத்து ஊடக சந்திப்பில் பங்கெடுத்தோர் கைது செய்யப்பட்டு மிரட்டப்பட்டு அவ்வாறான கடத்தல்கள் பற்றி தெரிவித்தமை பொய்யானதென தெரிவித்திருந்தனர்.

ஆயினும் தற்போது அவ்வாறாக மறுதலித்தமை மிரட்டப்பட்டதாலேயே நடந்ததாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, பொய் சாட்சியம் வழங்கியவர்களில் ஒருவரான வழக்கின் இரண்டாவது சாட்சி அதுல சஞ்சீவ மதநாயக்க தாம் பொய் சாட்சியம் வழங்கியமையை ஒப்புக்கொண்டார்.

சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வெள்ளை வான் வழக்கின் பிரதான சாட்சியங்களில் ஒருவர், நீதவான் முன்னிலையில் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம் பொய்யானது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குறித்து பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை உள்ளிட்ட பதினான்கு குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய விசாரணையே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற போது சாட்சியாளர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியாளரான மதநாயக்க, ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியது தனது வாழ்வில் எதிர்கொண்ட உண்மை சம்பவம் என தெரிவித்திருந்தார். 

இவ்வாறான நிலையிலேயே நேற்று வழங்கிய சாட்சியத்தின் போது, அப்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் அழுத்தம் காரணமாக கொழும்பு பிரதான நீதவானிடம் பொய்யான வாக்குமூலமொன்றை வழங்க தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது குடும்ப நல்வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி யோசித்த பிறகு இந்த தவறான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments