திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்




யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, சேதமாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சைவ சிறுவர் இல்லத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நபர் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்களை உடல்ரீதியாக துன்புறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து இல்ல நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் , விடுதியில் இருந்து வெளியேறாது தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்தமையால் கடந்த திங்கட்கிழமை விடுதி நிர்வாகத்தினர் நீதிமன்றை நாடியதை அடுத்து , முகாமையாளர் உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என நீதிமன்று கட்டளையிட்டது. 

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை சில மாணவர்கள் இல்ல விடுதியின் சில பகுதிகளையும் , இல்ல அலுவலகத்தினையும் அடித்து நொறுக்கி பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி இருந்தனர். 

தம்மால் பணி நீக்கம் செய்யப்பட்ட முகாமையாளரின் தூண்டுதலில் தான் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என இல்ல நிர்வாகம் குற்றம் சாட்டி இருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சிறுவர் இல்லத்தின் முன்பாக ,பழைய மாணவர்கள் , ஊரவர்கள் சிலர் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். 





No comments