யாழ். மாநகர முதல்வர் தெரிவு - தமிழரசு சார்பில் சொலமன்?






யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில்க ட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

சொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு மார்ச் 10ம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

2022 டிசெம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெடின் முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த பட்ஜெட் சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. 

அதன் பின் பட்ஜெட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு பெப்ருவரி 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பட்ஜெட் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன. 

இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments