சாணக்கியனுடன் வியாழேந்திரன் கூட்டு!



மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்குகளிற்கு எதிராக பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெரும் குழப்ப நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மாவட்ட செயலகத்தின், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.அவ்வேளையில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே, முறுகல் நிலையேற்பட்டதுடன், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.

பதிலடியாக மாவட்டச் செயலகத்திற்குள் அதிகாரிகள் உள்நுழைய முடியாதவாறு மாவட்டச் செயலக கதவினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின்திட்டத்தினை அமைப்பதற்காக, விவசாய காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில், இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக்கோரியும், வாகரைப் பகுதியில், காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனிடையே மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரியிருந்தார். இந்நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிற்கும் சாணக்கியனிற்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவித்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றிருந்தார்.

அவரை தொடர்ந்து, இரா.சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து,கூட்டத்தில் வெளிநடப்புச் செய்திருந்தார். 


No comments