காவல்துறையே சூடு நடாத்தியது!



வடமராட்சி கிழக்கின் நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதல் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கி சூட்டு சம்பவமாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து நாகர் கோவில் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையில் குவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர தேசத்திலிருந்து நாடு திரும்பிய உள்ளுர் பொதுமகன்  ஒருவர் மீது நேற்றுமுன் தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக நாகர்கோவில் பகுதிக்கு நேற்று மாலை காவல்துறையினர் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் காவல்துறையினர் முரண்பட்டுள்ளனர்.முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.கலவரத்தில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகி பல பேர் காயமடைந்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

பதற்றமான சூழ்நிலையில் அருகாக இருந்த இந்து ஆலய சப்பற கொட்டில் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.


No comments