கச்சதீவிற்கு ஓய்வெடுக்கவே வந்துள்ளாராம்?



கச்சதீவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினரின் வழிபாட்டிற்காகவே சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையும் கச்சதீவில் நிர்மாணிக்கப்படாது எனவும் கடற்படை ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளதுடன் அங்கு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாகும்.

இந்நிலையில் கச்சதீவில் தற்போது, இரகசியமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை இலங்கையிலும் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகளை கொண்டு பனை ஓலையினால் வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்ததுடன் புத்தர் சிலைக்கு பின்னால் அரச மரங்கள் நாட்டப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக, ஒரு சிறிய புத்தர் சிலை கச்சதீவிலுள்ள கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, கச்சதீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என்றும், எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது என்றும் கடற்படையின் ஊடப்பிரிவு  தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியா, ஆரம்பத்திலேயே வன்மையாக கண்டிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கச்சதீவு விடயம் தொடர்பில் கண்டும் காணாதது போல் இருந்தால் இலங்கை அரசாங்கம் தான் விரும்பும் அனைத்தையும் சுலபமாக மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் பௌத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமையை வெளிப்படையாக காணக் கூடியவாறு இருக்கின்றதெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments