கௌதாரிமுனை: வென்றது இந்தியா!


 

கிளிநொச்சியின் கௌதாரிமுனை பகுதியை யார் தக்கவைத்துக்கொள்வதென்ற சீன-இந்திய இழுபறியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

அவ்வகையில் மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையும் இந்தியாவின் அதானி குழுமமும் நேற்று மாலை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன .

ஒப்பந்தத்தின் படி மன்னாரில் 250 மெகா வோட்ஸ், பூநகரியில் 100 மெகா வோட்ஸ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் சுமார் 44 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் அமையவுள்ளது.

திட்டம் இரு ஆண்டுகளில் நிறைவுத்தப்படும் எனவும் அத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை திட்டங்களில் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்த மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்படவில்லையெனவும் இதனால், இது சட்டவிரோதமான ஒப்பந்தம் என குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது.

எனினும் அதனை தொடர்புடைய தரப்புக்கள் மறுதலித்துள்ளதுடன் உரிய அனுமதிகளுடன் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளன.

முன்னதாக கௌதாரிமுனையில் சீன நிறுவனங்கள் கடலட்டை பண்ணைகளை அமைக்க முற்பட்டு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments