சனிக்கிழமை வரை மழை தொடரும் ; காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!


யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்  உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதுமாக கரையைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 நேற்று காலை முதல் இன்று வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள்  யாழ் மாவட்டத்தில் 118.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது,

தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை நாளை மறுதினம் வரை தொடரும். 

மேலும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ வேகத்தில் வீசுகின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம். 

வடக்கு  மக்கள் தொடர்ந்து அவதானமாக இருப்பது அவசியம் என்றார் .

No comments