யாழில் இந்திய மீனவ தலைவர்கள்:டக்ளஸ் எச்சரிக்கை !

 


தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.

பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே குழுவினர் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகளின் உரிமையாளர்களும், இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுமே யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை பூரணமாக கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட கடற்றொழில் அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களினால் இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாடுகளுக்கிடையேயான அசௌகரியங்களை உருவாக்கக்கூடிய எந்தவிதமான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாதென அமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments