ஒருபோதும் சமரசம் கிடையாது - உக்ரைன்: உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பில்லை - ரஷ்யா


ரஷ்யாவின் படையெடுப்பு பிறகு, முதன்முறையாக வெளிநாடு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

போர் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெலென்ஸ்கி, ஒரு அதிபராக நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் ஒரு போதும் சமரசம் செய்துக்கொள்ள மாட்டேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்து விடமாட்டோம் என்றும், உக்ரைனுக்கு நேட்டோ படைகள் துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகள் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடின் கண்ணியமாக நடந்துக்கொண்டால், போர் முடிவுக்கு வரும் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

இதேநேரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தால், எந்த ஒரு நன்மையும் உக்ரைனுக்கு கிடைக்காது எனவும், உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும், ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி, மோதலை தீவிரப்படுத்தும் எனவும், உக்ரைனுக்கே எதிர்வினையாற்றும் என்றும் எச்சரித்தார்.

No comments