உள்ளூராட்சித் தேர்தல் - மனுக்கள் ஜனவரியில் விசாரணைக்கு !


உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர லங்கா சபை மற்றும் பல சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கடந்த திங்கட்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜீ.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மனுக்கள் பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி இதற்கான விளக்கத்தை வழங்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என்ற நிலையில், தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments