காணாமல் போனோர் குடும்பத்திற்கு தலைக்கு ஆயிரம்?



மக்களை ஏமாற்றும் நோக்குடன், அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை, உடனடியாக அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைந்து, அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என  மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம்.காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும்,பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம்.

அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள்.

இங்கே ஒன்றும் நடக்கவில்லை என்று காட்டும் வகையிலும் ஐ.நாவிற்கு தமது அறிக்கைகளை வழங்க காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இழப்பீடு வழங்க முயற்சிக்கின்றனர்.

நாங்கள் இழப்பீட்டிற்காக இவ்வளவு காலமும் போராடவில்லை.எமது உறவுகளுக்காகவும், அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும்,உறவுகளையுமே நாங்கள் கேட்கிறோம்.அவர்களுக்கு என்ன நடந்தது?என்றே கடந்த 15 வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.எமது உறவுகளை திருப்பி தாருங்கள் என்று கேட்கின்றோம்.ஆனால் அதை பற்றி கதைக்கிறார்கள் இல்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 148 பேர் இதுவரை மரணித்துள்ளனர் எனவும் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் 77 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அலுவலகத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன,

யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் தொடர்பிலான அலுவலகத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் அலுவலகப்பணிகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு பயணக்கொடுப்பனவாக ஆயிரம் ரூபாய்; அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது,


No comments