கூட்டமைப்பு இனியாவது சிந்திக்கட்டும்!



தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று இடம்பெற்றிருந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தி உறவுகள்; ஈடுபட்டிருந்தனர்.

'ராஜபக்ச குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத் தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபனந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலைப்புலிகள் கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரின் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் குடும்பங்கள் தெரிவித்துள்ளன. 


No comments