இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்


வெளிநாட்டு கடன்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை துரிதமாக மேலும் மோசமடையலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மில்லியன் கணக்காண மக்களின் அடிப்படை தேவைகள் மேலும் ஆபத்திற்குள்ளாகலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளிற்கு கடன் வழங்குநர்கள் இணங்கவேண்டும் இதன் காரணமாக இலங்கை சர்வதேச நாணயநிதியம் உலக வங்கி போன்றவற்றிடமிருந்து நிதியை பெறுவதற்கான இறுதி அங்கீகாரத்தை பெறலாம் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமைதியான ஆர்ப்பாட்டம் உட்பட அடிப்படை உரிமைகளை மதிக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிகாரிகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர் ரணில்விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கியுள்ளார் மிக மோசமான பயங்கரவாத தடைசட்டத்தை மாணவ தலைவர்களை தடுத்து வைப்பதற்கு பயன்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றால் அவசரகால நிலையை அறிவித்து பாதுகாப்பு படையினரை பயன்படுத்துவேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை உட்பட மனித உரிமைகளிற்கான மதிப்பு இல்லாத பட்சத்தில் ஊழல் போன்றவற்றிற்காக இலங்கையர்கள் அரசியல்வாதிகளை பொறுப்புக்கூறச்செய்ய முடியாது என  தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச சகாக்கள் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கையாக மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


No comments