கைதான இந்திய மீனவ சிறுவனுக்கு நன்னடத்தை!


 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை கைதான 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று (07) திங்கட்கிழமை  மதியம் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கைதாகியுள்ள சிறுவன் சிறுநீரகப்பாதிப்பிற்குள்ளான நோயாளியென்ற வகையில் விடுவிக்க தமிழகத்திலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தனது தந்தையுடன் வந்திருந்த இம்ரோன் ராயின்சன் என்னும் அச்சிறுவன் 2009அன்றே பிறந்தவர்.அத்தோடு அவர் ஓர் சிறுநீரகப் பாதிப்பிற்கு இலக்கான சிறுவன் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த சனிக்கிழமை (05) இரவு 2 படகையும் அதில் இருந்த சிறுவன் உட்பட இந்திய மீனவர்கள் 14 பேரையும்  இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.


No comments