ஆஸ்ரேலியா செல்லமுற்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரைச் சேர்ந்த 45 பேர் கைது!


அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்காக உனவட்டுன பகுதியில் தங்கியிருந்த 45 பேர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி, ஹபராதுவ கடற்கரைப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறையினர்  மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 45 சட்டவிரோத குடியேற்றவாசிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக இடம்பெயர்வதற்காக படகு ஒன்று வரும் வரை அவர்கள் தங்கும் விடுதியில் காத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 35 ஆண்களும் 07 பெண்களும் 18 வயதுக்குட்பட்ட 03 நபர்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், வென்னப்புவ மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதேவேளை, இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​குறித்த நபர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட பேருந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக ஒரு மாதகாலமாக பல இடங்களில் தங்கியிருந்துள்ளனர்.

சந்தேகநபர்களும் பேருந்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராதுவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



No comments