விவசாயிகளிற்கு உரம் அவசியம்:மீனவ தலைவர்



விவசாயத்திற்கு தேவையான உரத்தையும் எரிபொருளையும் அரசாங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய என்.வி.சுப்பிரமணியம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மஹிந்த அரசாங்கத்தின் தவறான கொள்கை காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் வெளிநாட்டில் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதை திடீரென தடை செய்ததன் மூலம் பயிர்ச்செய்கைகள், விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நெல் அறுவடை குறைவடைந்ததுடன் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உரமானது 20 மடங்கு வரை விலை அதிகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டும் விற்பனை செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இதனால் உரத்தை பெறுவதில் விவசாயிகள் பாரிய நெருக்கடியை சந்தித்ததுடன் விளைச்சலும் வீழ்ச்சி கண்டது.


கோட்டாபய ராஜபக்சே அரசாங்கம் விலகி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்த போதும் அவர்கள் வாய்க்கு ருசியான வார்த்தைகளை கூறுகின்றார்கள் ஒழிய செயலில் எதுவும் நடந்ததாக இல்லை.


நாங்கள் உயிர் வாழ்வதற்காக வேணும் உரத்தை இறக்குமதி செய்து அதனை விவசாயிகளுக்கு வழங்கி வைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விவசாயத்துக்கு தேவையான எரிபொருட்களான மண்ணெண்ணை, டீசல் போன்றவை விநியோகிக்கப்படாததால் விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. எரிபொருளை தொடர்ச்சியாக மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.

No comments