பிரதமராக வர வேண்டும் என்ற போதே கொலை!



பௌத்த பிக்குகள் அன்று பிரதமர் பதவிக்கு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக பெர்னாண்டோபுள்ளேவின் மனைவியான நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பிரதமராக வர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்த போதிலும் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வரை மாத்திரமே செல்ல முடியும் என்று அவர் கூறினார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் சட்ட கட்டமைப்பினால், இதுவரை உண்மையான கொலையாளிகளை கண்டறிய முடியாமல் போயிருப்பது பிரச்சினைக்குரியது. இதன் காரணமாக உண்மையான கொலையாளிகள் தற்போது சுதந்திரமாக இருந்து வருகின்றனர்.


ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் கொலை சம்பந்தமான வழக்கில் சகல குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் ஜெயராஜ் தானே குண்டை கட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டாரா என சிலர் என்னிடம் கேட்கின்றனர்.


ஜெயராஜ் உடம்பில் குண்டை கட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ளவில்லையே. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி 16 பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


சம்பவம் நடந்து 14 ஆண்டுகளுக்கு பின்னரே வழக்கின் தீர்ப்பு வருகிறது. சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சந்தேகங்கள் இன்றி உறுதிப்படுத்த முடியவில்லை என்றே வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த முடியாதது எமது சட்ட கட்டமைப்பில் இருக்கும் குறைப்பாடு. எவ்வாறாயினும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார்.


குண்டை எடுத்து வந்த இளைஞன் அரச சாட்சியாளராக மாறினார். அதற்கு அப்பால் எமக்கு எதுவும் தெரியாது. ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை இழந்தை நாங்கள் உணர்ந்தோமே அன்றி ஏனைய விடயங்கள் பற்றி அறியவில்லை எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.


எது எப்படி இருந்த போதிலும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விடுதலைப்புலிகளின் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் கொலையுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பில்லை எனவும் அவரது கொலையில் சதித்திட்டங்கள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தற்போது பேசப்பட்டுவருகின்றது

No comments