ரணிலின் கதிரைக்கு ஆபத்தில்லை!



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான காமினி அமரசேகர ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம், இந்த மனுவை நிராகரித்துள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற் கொண்டு இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியில்லாதவர் என அறிவிக்குமாறு கோரி வினிவித பெரமுனவின் பொதுச் செயலாளர் நாகானந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் கனிஷ்க டி சில்வா பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார். மேலும், பொருள், உண்மைகளை தவறான முறையில் மறைத்ததற்காக மனுதாரர் ஏற்கனவே தாக்கல் செய்த இதேபோன்ற மனு, உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமையை அவர் சுட்டிக்காட்டினார்.

தேசியப் பட்டியல் வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து கட்சிச் செயலாளர்களால் பெறப்பட்ட நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எனினும் கட்டாய காலத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தமக்கு வழங்கிய அறிவித்தல்களுக்கு இணங்கத் தவறியதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

No comments