ஆசியாவின் அதிசயம்:பெற்றோலை போல சாராயத்திற்கும்?



எரிபொருள் அதற்கு கியூ ஆர் கோட் என மக்கள் வீதி வீதியாக அலைய "குடிமகன்களிற்கும் " அதனை அறிமுகப்படுத்தி சாதனை புரிகிறது இலங்கை அரசு.

மதுபான போத்தல்கள் மற்றும் பியர் கேன்கள் போலியானவையா என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு ஸ்டிக்கர் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அவற்றின் உற்பத்தியாளர், உற்பத்தி திகதி, உள்ளடக்கம் உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள ஓர் விசேட செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அலைபேசிகளில் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொண்டால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் மதுபான போத்தல்கள் அசலா அல்லது நகலா என்பதனை அறிந்து கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்டிக்கரை உற்பத்தி செய்த நிறுவன பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அவற்றை பரிசோதனை செய்ததன் பின்னர் செயலி மக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.


ஸ்டிக்கர் ஒட்டப்பட முடியாத போத்தல்கள் மற்றும் கேன்களின் மூடிகளில் ஸ்டிக்கரை பிரின்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments