கணவரால் மட்டக்களப்பில் மனைவி கொலை!



மட்டக்களப்பு, சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் .

நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு, இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டுள்ளார் எனவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு, குணமடைந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்

No comments