பிரித்தானியாவில் பண வீக்கம்: வட்டி வீதத்தை அதிகரிக்க முடிவு!!


பணவிக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், வட்டி விகிதம் உள்ளிட்ட நாணய கொள்கைகளை மாற்றுவதில்லை என ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதத்தை உயர்த்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. 

ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு செய்வதற்கு முன்பு அமெரிக்க டொலர் மற்றும் ஸ்விஸ் பிராங்க் ஆகியவற்றுக்கு நிகரான யூரோ மதிப்பு நிலையானதாக இருந்தது. கொரோனா தொற்று பாதிப்பு மத்தியிலும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரம் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கியை போல் அல்லாமல் இங்கிலாந்து வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7 வாரங்களில் 2வது முறையாக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்தது. 

உலகில் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், இங்கிலாந்தில் எரிசக்தி விலை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 50 சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. அன்றாட செலவுகள் உயர்ந்து வருவதால் நாட்டு மக்களுக்கு சுமார் 9 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நிதி திட்டத்தை இங்கிலாந்து நிதி மந்திரி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments