ஜெனிவா கடிதத்தினை கைவிடும் நிலையில் தமிழ்த் தரப்பினர்?


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பும் கடிதத்தினை கைவிடுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுவதாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதம், பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ ஆகிய தரப்புக்களுடன் கலந்துரையாடப்படாது தயாரிக்கப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் மட்டுமே கையொப்பமிட்டிருந்தார்.

கடந்த கூட்டத்தொடரின்போது சம்பந்தன் உட்பட விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் சமயத்தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதனால், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்,தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்டவை பிறிதாக கடிதமொன்றை அனுப்பியிருந்தன.

இம்முறையும், அக்கடிதத்தின் தொடர்ச்சியாக கடிதமொன்றை அனுப்புவதாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது சம்பந்தனின் கடிதத்திற்கு மேலதிகமாக கூற வேண்டிய விடயங்கள் இருந்தால் மட்டுமே இம்முறை கடிதம் அனுப்புவதென்று அக்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும், சம்பந்தன் ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதத்தின் தமிழ் வடிவம் மட்டுமே பங்காளிக்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் கைகளில் தற்போது வரையில் உள்ளமையால், அவர்கள் அதன் ஆங்கில வடிவத்தினை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பின்னரே ஜெனிவாவுக்கான ஏனைய தரப்பினரின் கடிதம் செல்வது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments