கொட்டும் மழைக்கு மத்தியில் பேரணி!



 கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட பேரணியாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கொட்டும் மழையின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழையில் நனைந்தவாறு போராட்டத்திலை முன்னெடுத்திருந்தனர்.

டிப்போ சந்தியில் கவனயூர்ப்பில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனிய உரிமைகள் செயலகத்திற்கான மகஜரை  வேலன் சுவாமிகளிடம் கையளித்திருந்தனர்.


போராட்டத்தின்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்க செயலாளர் லீலாதேவி குறிப்பிடுகையில்,

 போராட்டத்திற்காக பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் குறித்த அழைப்பினை ஏற்று பலர் இங்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்றைய போராட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தந்திருக்கவி்ல்லை.


ஒரு சில அரசியல்வாதிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிற்கு ஒரு செய்தியை நாங்கள் தருகின்றோம். இந்த போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு கடந்த காலங்கள் போன்று இல்லை. உங்கள் வீட்டிலும் இதுபோன்று சம்பவங்களும், காணாமல் ஆக்கப்படுதலும் இல்லாதிருக்கவும், பேரப்பிள்ளைகள், அடுத்த சந்ததிக்கு இவ்வாறு நடந்தேறக்கூடாது என்பதற்காகவுமே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.


உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள வேப்பம் மரம் அழிக்கப்பட்டு அரச மரம் முளைக்கும்போதுதான் அதனை நீங்கள் உணர்வீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் எமக்க போதாது. உண்மையில் இந்த போராட்டத்தை அவர்கள் முன்னின்று நடாத்தியிருக்க வே்ணடும். அவர்கள் தமது ஆதரவாளர்களை அழைத்து வந்து இந்த போராட்டத்தை வலுப்பெற வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு வவுனியா மாவட்ட சங்க தலைவி குறிப்பிடுகையில்,

எமது உறவுகள் இறந்துவிட்டனர் என்பதாக அரசாங்கம் கூறுகின்றது. யுத்தத்தில் இறந்தவர்களை நாங்கள் கேட்கவில்லை. சரணடைந்த, கையளிக்கப்பட்ட எமது உறவுகளையே நாங்கள் கேட்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை எமக்கு வெளிப்படுத்த வேண்டும். அதற்காகவே நாங்கள் சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

No comments