தமிழகத்தில் மீண்டும் கரை ஒதுங்கிய படகு!



தமிழக்கத்தின் தனுஸ்கோடி அருகே  இரண்டாம் மணல் திட்டில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு  குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக திங்கட்கிழமை இரவு  தனுஸ்கோடி பகுதி  நாட்டுப்படகு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு சென்ற தமிழக பொலிசார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு  கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

மீட்கப்பட்ட பைபர் படகு  புத்தளம்  பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட  வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்துள்ளது. 

படகில் யாரேனும் ஊடுருவினார்களா?  அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கியுள்ளதா?  என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள்  இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள்  மீட்கப்பட்ட படகை சுங்க துறையினரிடம் ஒப்படைத்தனர்.


No comments