13 உள்ளே! வெளியே?
13வது திருத்தச்சட்டத்தை முன்னிறுத்தி முன்னணியும் மற்றைய கட்சிகளும் தேர்தல் அரசியல் செய்துவரும் நிலையில் அதனில் ஏதுமில்லையென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் பதிவர் ஒருவர்.
வட மாகாண சபை உருவாக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் திருத்தத்தின் கீழ் பிரதம செயலாளரின் கடமைக் கூறுகளும் அவரின் பணிப்பதிகாரி (Reporting Officer) முதலமைச்சரா? ஆளுநரா? என்ற வாதப் பிரதிவாதங்கள் உருவாகி இருந்தது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரதம செயலாளர் விடுமுறை எடுத்தல், மாகாணத்துக்கு வெளியே செல்லுதல், வெளிநாடுகளுக்கு செல்லுதல் போன்ற காலப்பகுதிகளில் முதல் அமைச்சருக்கு முன்னறிவித்தல் வழங்கப்பட வேண்டும் என்றும் முதல் அமைச்சரினதும் அமைச்சர்களினதும் சட்டபூர்வமான கட்டளைகளு க்கு கீழ் மாகாண நிர்வாகத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டுமென்றும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்
ஆனால் இந்த சுற்றுநிருபம் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலக்ஷ்மி ரமேஸ் அவர்கள் , முதல் அமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் 13 ஆம் திருத்த சட்டத்தின் கீழ் மாகாணத்தின் பிரதம செயலாளர் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் என்றும்
மாகாணப் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் எந்த அதிகாரமும் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் உத்தரவு இட்டு இருந்தது .
இந்த வழக்கில் முதலமைச்சர் தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு சுமந்திரன் அவர்கள் கூட முதலமைச்சருக்கு பிரதம செயலாளர் மீது அதிகாரம் உண்டு என வாதிடவில்லை.
அதே நேரம் இடைக்கால உத்தரவொன்று நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தான் தாக்கல் செய்த சத்தியக் கடதாசியில், பிரதம செயலாளர் தொடர்பான சுற்று நிருபத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்து இருந்தார்
உண்மையில் 13 ஆம் திருத்தத்தின் கீழ் பிரதம செயலாளர் மட்டுமன்றி முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் எல்லோருமே இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரிகள். இவர்கள் மீதும் உண்மையான கட்டுப்பாடு அவ்வவ் மாகாண அமைச்சர்களுக்கில்லை
SLAS அதிகாரிகள் மற்றும் மத்திய பொதுச் சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்படுபவர்களைத் தவிர மீதமுள்ள ஊழியர்கள் மாகாணப் பொதுச் சேவை ஆளுநரின் நேரடி கட்டுப்படுக்குட்பட்டதாக இருக்கின்றது
முதலமைச்சரின் நேரடி ஆணையின் கீழ், அவருக்கு மட்டும் பொறுப்புக் கூறும் ஒரு அரச ஊழியர் தானும் இல்லை
இதன் அடிப்படையில் 13 ஆம் திருத்தத்தின் கீழ் முதலமைச்சர் ஒருவர் கிராம சேவையாளருக்கு கட்டளை இடும் அதிகாரம் கூட இல்லை என்பதே உண்மையாக இருக்கின்றது
இவை போதாதென்று சனாதிபதி பிரேமதாசா காலத்தில் நிறைவேற்றப்பட்ட அதிகார கைமாற்ற சட்டத்தின் (Transfer of Powers Act No 58 of 1992) பிரகாரம் மாகாண சபையால் நிறைவேற்றப்படும் சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கூட பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது .
அந்தவகையில் பிரதேச செயலாளர்கள் பொறுப்புக் கூறுவது கூட முதலமைச்சரிடம் அல்ல. அவர்களைக் கட்டுபடுத்துவதும் மத்திய அரசாங்கம் தான்.
இந்த நிலையில் கிராம சேவகர்களை கூட வழிநடத்தும் அதிகாரமற்ற 13 ஆம் திருத்தத்தின் வங்குரோத்து பற்றிய உண்மைகளை மறைத்து விட்டு 13ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று கேட்பதில் என்ன பயன் என்று தெரியவில்லை
இல்லாத அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கதை சொல்லுகின்றார்கள்
ஒற்றையாட்சி தத்துவத்திற்கு உட்பட்டிருக்கும் 13ஆம் திருத்ததை இடைக்கால தீர்வாக நடைமுறைப்படுத்தி அதனூடாக சமஸ்டி நோக்கி பயணிக்கலாம் என வசனம் பேசுகின்றார்கள்
ஒற்றையாட்சி தத்துவத்திற்கு உட்பட்டிருக்கும் 13ஆம் திருத்ததிற்கு எப்படி பிளஸ் போட முடியும் ? சமஸ்டியை பெற்று கொள்ள முடியும் ?
அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவரும் 13ஆம் திருத்தத்தால் ஒரு பயனும் இல்லை என்பதைச் தைரியமாக சொல்ல முடியும்
Post a Comment